பெரும் பதற்றம் : நாடாளுமன்றம் 10 நிமிடத்திற்கு ஒத்திவைப்பு

பெரும் களேபரத்திற்கு மத்தியில் நாடாளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஏற்றுமதி அபிவிருத்தி நிதி துறைமுகம் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீடு உற்பத்தி வரி போன்ற சட்டங்களின் கீழான கட்டளைகள் தொடர்பிலான விவாதம் இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.

விவாதத்தின் இறுதியில் வாக்கெடுப்பை நடத்தும்படி எதிரணியினர் குரல் எழுப்ப, நாளை வாக்கெடுப்பை ஒத்திவைக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியினர் கோரிக்கை முன்வைத்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகை இன்று குறைவாகியிருந்த படியினாலும், சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் சமூகமளித்திருக்காத காரணத்தினாலும் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டது.

இதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூச்சலிட்டதோடு வாக்கெடுப்பை நடத்துமாறு வலியுறுத்தியதால் சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.

இதன்போது அறிவிப்பை விடுத்த சபாநாயகர், உடனடியாக கட்சித் தலைவர்கள் கூட்டத்தை அழைத்து முடிவெடுப்பதாகவும், அதுவரை 10 நிமிடங்களுக்கு சபையை ஒத்திவைப்பதாகவும் அறிவித்தார்.

You May also like