எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற அனைத்து பிரதான வேட்பாளர்களும் இன்று சனிக்கிழமை ஒரே மேடைக்கு வரவுள்ளனர்.
மார்ச் 12 என்கிற இயக்கம் மற்றும் பிரதான தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்புக்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கின்றன.
இதன்படி கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் இன்று மாலை அனைத்து பிரதான வேட்பாளர்களும் ஒரே மேடையில் பிரசன்னமாகி தங்களுடைய கருத்துக்களைப் பகிரங்கமாக வெளிப்படுத்தவுள்ளனர்.
ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ, ஜே.வி.பியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க உட்பட ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க உள்ளிட்ட பிரதான வேட்பாளர்கள் இதில் பங்கேற்கின்றனர்.
இதேவேளை மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவு வரும்வரை விசேடமாக நேற்று மாலை வரை இந்த மேடைக்கு வருவதா இல்லையா என்கிற முடிவை அறிவித்திருக்காத ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச, நேற்று இரவு தாம் வருவதை உறுதிசெய்திருக்கின்றார்.