Special Report:குமார வெல்கமவை படுகொலை செய்ய முயற்சித்தது யார்? பரபரப்பு தகவல்!

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணிக்கு எதிராக பகிரங்கமாக கருத்து வெளியிட்டு வருவதால் தனக்கு உயிராபத்து ஏற்பட்டிருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினரான குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

தனது இல்லத்திற்கு மர்ம நபர் ஒருவர் ஊடுருவியிருப்பதாகவும் எந்தவொரு பெறுமதியான பொருட்களும் திருடப்படவில்லை என்பதால் மாறாக தன்னை அச்சுறுத்த அல்லது படுகொலை செய்ய எடுக்கப்பட்ட முயற்சியாக அமைந்திருப்;பது குறித்து பொலிஸாரிடம் முறையிட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்சவுக்கு மஹிந்த அணியிலிருந்து முதலாவது எதிர்ப்பை வெளியிட்டவரான சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம அதன் பின்னர் ஒன்றிணைந்த எதிரணியிலிருந்து விலகி ஜனாதிபதி தேர்தலில் தனித்து போட்டியிடவும் முன்வந்தார்.

எனினும் அவர் போட்டியிடவில்லை என்பதோடு சுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் முயற்சியில் கட்சியின் போஷகரான முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுடன் இணைந்து ஈடுபட்டு வருகின்றார்.

இந்நிலையில் இன்றைய தினம் எமது  True news Tamil இணையத்தளத்திற்கு கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினரான குமார வெல்கம, பொதுஜன முன்னணி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணிக்கு எதிராக பகிரங்கமாக கருத்து தெரிவித்துவரும் தனக்கு தற்போது உயிராபத்து ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

அண்மையில் நுவரெலியா சென்றிருந்த போது தனது இல்லத்திற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் வீட்டிலிருந்த பொருட்களை எறிந்துவிட்டுச் சென்றிருப்பதாகவும் ஆனால் எந்தவொரு பெறுமதியான பொருளும் திருடப்படாதிருந்த படியினால் தன்னை படுகொலை செய்வதற்கான முயற்சியாக இது இடம்பெற்றிருக்கலாம் என்றும் குமார வெல்கம எம்.பி தெரிவித்தார்.

இதுபற்றி பொலிஸாரிடம் முறையிட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

You May also like