கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகளுக்காக ஆணைக்குழு சென்று அமர்வுநடத்திய ஒருசில பகுதிகளுக்கு மீள்விஜயம் செய்ய வேண்டும் என்று முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
முன்னைய அரசாங்கத்தினால் காணாமல் போனோர் பற்றிய ஆணைக்குழு அமைக்கப்பட்டிருந்தாலும் அந்த ஆணைக்குழு தொடர்ந்தும் இயங்கும் என்றும் அவர் கூறினார்.
ஜனாதிபதி கோட்டாபய மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் தலைமையிலான அரசாங்கத்தின் முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சரான கெஹலிய ரம்புக்வெல இன்றைய தினம் கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தினார்
புதிய அரசாங்கம் மீது உள்நாட்டு உட்பட சர்வதேச மட்டத்தில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ள சர்ச்சைக்குரிய கொழும்பிலுள்ள சுவிட்ஸர்லாந்து தூதரகத்தில் பணிபுரியும் பெண் பணியாளர் வெள்ளை வானில் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட சம்பவம் குறித்தும் இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கருத்து வெளியிட்டார்.
அரசாங்கத்தின் அவசியத்திற்காக இந்த சம்பவம் நிகழ்த்தப்பட்டிருந்தால் அதனை மூடிமறைப்பதற்கு எந்தவொரு அவசியமும் கிடையாது என்று கூறிய அவர், இப்படியான சேறுபூசும் முயற்சியில் ஈடுபட்டிருப்போருக்கு மூளையில் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறினார்.