வரப்பிரசாதங்களுக்கு அடிமையான தமிழ்த் தலைவர்களால் அரசியல் கைதிகளின் விடுதலை கேள்விக்குறியாகிவிட்டதாக பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் குற்றஞ்சாட்டினார்.
கொழும்பு மகஸின் சிறைச்சாலைக்கு அவர் இன்று காலை விஜயம் செய்த பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோது இதனைக் குறிப்பிட்டார்.
1993ஆம் ஆண்டு மட்டக்களப்பில் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு முன் இடம்பெற்ற சுற்றிவளைப்பின் போது, செல்லப்பிள்ளை மகேந்திரன் என்பவர் படையினரால் கைது செய்யப்பட்டார்.
மட்டக்களப்பு – முறக்கொட்டாஞ்சேனையை சேர்ந்த தமிழ் அரசியல் கைதி செல்லப்பிள்ளை மகேந்திரன் தனது 46வது வயதில் நேற்று உயிரிழந்துள்ளார்.
சுமார் 27 வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.
தனது வாழ்நாட்களை சிறைச்சாலையிலேயே வாழ்ந்து முடித்த செல்லப்பிள்ளை மகேந்திரனைப் போன்று கடந்த காலங்களிலும், பல தமிழ் அரசியல் கைதிகள் உயிரிழந்துள்ளார்கள்.
இந்த நிலையில், கொழும்பு – மகஸின் சிறைச்சாலைக்கு இன்றைய தினம் காலை விஜயம் மேற்கொண்ட முற்போக்கு தமிழர் அமைப்பின் தலைவரான மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் உயிரிழந்த தமிழ் அரசியல் கைதியான செல்லப்பிள்ளை மகேந்திரன் தொடர்பில் கருத்து வெளியிட்டார்.
வருடக்கணக்கில் சிறைவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சிறைச்சாலையிலேயே உயிரிழப்பது இதுவே இறுதி சந்தர்ப்பமாக இருக்க வேண்டும் எனவும் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
VIDEO – https://www.facebook.com/breakinglktamil/videos/999502433756936/