ரிஷாட்,ஹக்கீம்,ஹிஸ்புல்லாவை கைதுசெய்-மீண்டும் முழங்கும் ஞானசார தேரர்

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களையடுத்து குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட முஸ்லிம் அரசியல்வாதிகளைக் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை பொதுபல சேனா விடுத்துள்ளது.

நாட்டில் இன்னமும் அடிப்படைவாத மற்றும் மதமாற்று செயற்பாடுகளில் ஈடுபடுவோர் தொடர்ச்சியாக செயற்பட்டே வருவதாக தெரிவிக்கின்ற பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், அனைத்து மத்ரஸா பாடசாலைகளையும் அரசாங்கம் தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளரான கலகொட அத்தே ஞானசார தேரர் கொழும்பு இராஜகிரியவில் இன்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார்.

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தநிலையில் அவர் நடத்துகின்ற இரண்டாவது ஊடக சந்திப்பு இதுவாகும்.

இந்நிலையில் இங்கு உரையாற்றிய ஞானசார தேரர், உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல்களையடுத்து குற்றஞ்சாட்டப்பட்ட முஸ்லிம் அரசியல்வாதிகள் இதுவரை கைது செய்யப்படாதிருப்பது குறித்து கடும் அதிருப்தியை வெளியிட்டார்.

நாட்டில் இன்றும் மதமாற்றுச் செயற்பாடும் அடிப்படைவாத செயற்பாடுகளும் கட்டுப்படுத்த முடியாத வகையில் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கின்ற பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளரான ஞானசார தேரர், நாட்டிலுள்ள அனைத்து மத்ரஸா கல்லூரிகளையும் உடனடியாக அரசாங்கம் தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

You May also like