முகக் கவச பற்றாக்குறை: கொரோனா தடுப்புக்கே ஆபத்து?

கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசேட வைத்திய பரிசோதனைகளை இடைநிறுத்த வேண்டிய நிலை ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்படடுள்ளது.

நுண்ணுயிரியலாளர் ஒருவரின் கூற்றுப்படி, நோயாளிகளின் மாதிரிகளை பரிசோதிக்கும் வைத்தியர்களுக்கு முகக் கவசங்களுக்கான பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைத்திய பரிசோதனைகளுக்கு பயன்படுத்தப்படும் ‘N95’ முகக்கவசங்களை சாதாரண பொதுமக்களும் பயன்படுத்துவதால், இதற்கான பற்றாக்குறை நிலவுவதாக பேராசிரியர் நீலிகா மளவிகே தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள காணொளியில், ஸ்ரீ ஜயவர்தபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா மளவிகே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் N95 முகக்கவசத்திற்கு தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில், கொரோனா வைரஸ் தொற்றை கண்டறியும் சோதனைகளை நிறுத்த வேண்டியேற்படும் என எச்சரித்துள்ள அவர், இந்த விடயமானது நாட்டின் அனைத்து மக்களுக்கும் பாதிப்பினை ஏற்படுத்ததும் விடயமாக மாறும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இதுபோன்ற சூழ்நிலையில் தேவையற்ற N95 மற்றும் பிற முகக்கவசங்களை பயன்படுத்த வேண்டாம் என இலங்கையர்களை அவர்  கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கையில் நிலவும் கொரோனா அச்ச சூழ்நிலை காரணமாக, கடைகள், வங்கிகள் மற்றும் சில அரச நிறுவனங்கள் முக்கவசம் இல்லாமல் மக்களை தமது வளாகத்திற்குள் நுழைவதைத் தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர், அனில் ஜாசிங்க சமீபத்தில் ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தார். எனினும் இது அவசியமற்ற ஒரு நடைமுறை எனவும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

மேலும், முகக்கவசத்தை அணிவது அவரவர் விருப்பம் எனவும், குறித்த முக்கவசத்தால் அணிந்திருப்பவருக்கு பாதுகாப்பு என்பதை விட, அவருக்கு அருகில் இருப்பவருக்கு நோய் பரவாமல் தடுப்பதற்கு உதவும் எனவும், ஒரு நபருக்கு காய்ச்சல் அல்லது நோய் பரவும் அபாயம் இருந்தால் மாத்திரமே முகக்கவசத்தை அணிவது சிறந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

You May also like