20ஆவது திருத்தத்தில் நாளை கையெழுத்திடுகிறார் சபாநாயகர்

நாடாளுமன்றத்தில் அண்மையில் பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றப்பட்ட 20ஆவது திருத்தச் சட்டத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாளை கையெழுத்திடவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டமூலங்கள் சபாநாயகரின் கையெழுத்தின் பின்னரே அமுலுக்குவரும் சட்டமாக அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் 22ஆம் திகதி நீதியமைச்சர் அலிசப்ரியினால் 20ஆவது திருத்த யோசனை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.

இதன் பின் இந்த திருத்த யோசனைக்கு எதிராக 39 மனுக்கள் உச்சநீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டதுடன் அவை மீதான விசாரணைகளும் நடைபெற்றன.

விசாரரணையின் நிறைவில் உச்சநீதிமன்றம் வியாக்கியானம் வழங்கிய பின் திருத்தப்பட வேண்டிய யோசனைகள் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு இரண்டுநாள் முழுவிவாதமும் நடத்தப்பட்டது.

இறுதியில் கடந்த 22ஆம் திகதி வியாழக்கிழமை வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது.

வாக்கெடுப்பில் 156 வாக்குகள் ஆதரவாகவும் 65 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டதில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்துடன் கோட்டா-மஹிந்த தலைமையிலான அரசாங்கம் 20ஆவது அரசியலமைப்புத் திருத்த யோசனையை நிறைவேற்றிக்கொண்டது.

இந்த நிலையில், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாளைய தினம் இந்த திருத்தத்தின் மீது கையெழுத்து இடவுள்ளதாக நாடாளுமன்ற மற்றும் சபாநாயகர் அலுவலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

You May also like