ஊரடங்கு மத்தியிலும் கொழும்பில் மக்கள் ஆர்ப்பாட்டம்

கொழும்பு – அளுத்மாவத்தை – இப்பாவத்த பகுதியில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படுகின்றது.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட நிலையிலேயே, பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர்.

வீதிக்கு இறங்கி, எதிர்ப்பு நடவடிக்கையில் பிரதேச மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தமது பகுதி தொடர்ச்சியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளமையினால், தமது வாழ்வாதாரம் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் குற்றஞ்சுமத்துகின்றனர்.

அத்துடன், 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ள போதிலும், ஒரு மாதத்திற்கு மேலதிகமாக தமது பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த நிலையில், மேலும் 14 நாட்கள் முடக்கப்படும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

நாளாந்த சம்பளத்திற்காவும், கூலித் தொழில்களையும் முன்னெடுக்கும் தமக்கு 5000 ரூபாவில் ஒரு மாதத்திற்கு மேல் எவ்வாறு வாழ்வது என பிரதேச மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

தாம் நிர்கதிக்குள்ளாகியுள்ள இந்த தருணம் வரை தம்மை எந்தவொரு அதிகாரியும் பார்வையிட வரவில்லை என கூறிய அவர், முகத்துவாரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்ப்பாட்டத்தின் பின்னரே இன்று வருகைத் தந்ததாகவும் பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

தமக்கான வாழ்வாதார பிரச்சினைகளுக்கு உரிய தீர்வொன்றை பெற்றுத் தர அதிகாரிகள் முன்வர வேண்டும் என இப்பாவத்த பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

You May also like