கோவிட் உடல்களை புதைக்காமல் தகனம் செய்வதை தொடர்ச்சியாக முன்னெடுக்கும்படி வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று இன்று வியாழக்கிழமை முற்பகல் நடைபெற்றுள்ளது.
கொழும்பிலுள்ள சுகாதார அமைச்சிற்கு முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் எதிர்காலத்திற்காக நாம் என்கிற அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
அமைதியான முறையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களின் கைகளில் கோவிட் சடலங்களை தகனம் செய்வதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானத்தில் தொடர்ந்தும் உறுதியாகவிருக்க வேண்டும் என்று வலியுறுத்தில் அடங்கிய வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.
மேலும் இனவாத சக்திகளுக்கு அரசாங்கம் அடிபணியக் கூடாது என்றும் கோவிட் உடல்களை புதைப்பதற்கு அனுமதியளிக்கக்கூடாது எனவும் ஆர்ப்பாட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டது.