பொலிஸார் மீது பதில் தாக்குதல் நடத்த முடியும்?

பொலிஸார் தனது உத்தியோகபூர்வ சீருடையின்போது சிவில் நபர் மீது தேவையற்ற வகையில் தாக்குதல் நடத்தினால், உயிர்பாதுகாப்பிற்காக பதில் தாக்குதலை நடத்தக்கூடிய அதிகாரம் சட்டத்தில் இருப்பதாக இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண இதனை இன்று ஊடகமொன்றுடன் நடத்திய நேர்காணலின்போது தெரிவித்துள்ளார்.

மஹரகம பொலிஸ் நிலைய வீதிப்போக்குவரத்து அதிகாரி, நேற்று வீதியில் வைத்து பட்டப்பகலில் நபர் ஒருவர் மீது மல்யுத்த வீரரைப் போல தாக்குதல் நடத்தியபோது பதிவாக வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்ட அதேவேளை, இன்று நுகேகொடை நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் குறித்த தாக்குதலுக்கு இலக்காகிய நபரால் பதில் தாக்குதலை பொலிஸார் மீது நடத்தியிருக்கலாமா என பொலிஸ் ஊடகப் பேச்சாளரிடம் வினவியபோது, முடியும் என்று அவர் பதிலளித்திருக்கின்றார்.

குற்றவியல் தண்டனைச் சட்டக்கோவையின் 92,93ஆம் பிரிவுகளில் அதற்கான விளக்கம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 

You May also like